🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அன்பொன்றே மாமறையாய் அகத்தினிலே ஏற்று
அடுத்தவரின் துன்பத்தைத் தம்துயராய்க் கொண்டு
தன்னலத்தைக் கருதாது தவித்தோர்க்கு வாழ்வாய்
தாயிழந்த சேய்க்கெல்லாம் தாலாட்டும் தாயாய்
இன்பத்தை ஈந்தாரே இன்னலுற்றோர்க் கெல்லாம்
இவர்போலே யார்வருவார் இவ்வுலகு காண!
பொன்னுலக மாந்தரெல்லாம் போற்றுகின்ற அன்னை!
புகழ்தூய தெரசாவைப் போற்றிடுவோம் நாமே!ஏதிலார்க்கு வாழ்வளித்தார் இயலார்நோய்த் தீர்த்தார்
ஏழைகளுக்காற் றும்தொண்டே இறைத்தொண்டு என்றார்
போதிமைந்தர் புத்தரைப்போல் பூந்துறவு பூண்டார்
பூவுலகில் எளியவர்க்குப் புத்தொளியைத் தந்தார்
ஊதியமாய் இசைவாழ்வை உலகத்திலே பெற்றார்!
உயிர்க்கெல்லாம் இரக்கத்தின் உருவமாக நின்றார்!
மேதினியில் அன்புதனை மெய்யறமாய்க் கொண்டார்
மெழுகுபோல் தனைஈந்த அருட்தாயே வாழி !!
🌹🌹🌹அன்புடன்,
பாவலர் அ.யாழ்த்தமிழன்,
ஆசிரியர் ,
புதுச்சேரி.🌹🌹🌹
***************
(என்னுடைய தூவல் ஓவியம்)
வணக்கம்
பதிலளிநீக்கு