என் சிந்தனையில் விளைந்த செவ்வந்திப் பூக்கள் !

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

(004) அறவெண்பா!

 அறவெண்பா!

🍁🍁🍁🍁🍁🍁

அறநெறி யாதென ஆய்ந்திடல் நன்றாம்

குறளைத் துணையெனக் கொண்டே!- குறையுள 

ஆரியப்  பண்பை யகற்றிட ஓங்குமே 

நேரிய நல்லறம் தான்.



வாய்மையும் ஈதலும் வாழ்வறமாய் ஏற்றுநிதம் 

தூய்மை மனத்தார் துலங்குவார் !- ஆய்ந்துநல்

அன்பே உயர்ந்த அறமெனக் கொண்டுலகில் 

இன்பமாய் வாழ்தல் நலம். 



உயிர்களிடம் அன்புசெயல் உள்ளத்தில் தூய்மை

முயன்றுநிதம் கொள்வீர் முறையே! - நயமிலாக்

காமம் வெகுளி களைந்து துணிவுடன்

தீமையை மாய்த்தல் சிறப்பு.

                                                                  

 அன்புடன்,



 பாவலர் அ. யாழ்த்தமிழன்,

புதுச்சேரி

3 கருத்துகள்:

  1. வெண்பாக்கள் அனைத்தும் அருமை. ஒவ்வொரு வெண்பாவுக்கும் வண்ண எழுத்துகளின் தேர்வு அருமை. பாடல்களைப் பதிவேற்றம் செய்வதிலும், வரிகளுக்கு வண்ணம் தருவதிலும், நிழற்படத்தைப் பதிவேற்றம் செய்வதிலும் நல்ல தேர்ச்சி காணப்படுகிறது. மொத்தத்தில், நான் எதிர்பார்த்ததைவிட மிகுந்த முன்னேற்றம் !

    ஒவ்வொரு வெண்பாவின் தலைப்பிலும் பாடல் என்ன வகை வெண்பா என்பதைக் குறிப்பிடலாம் – தனி வண்ண எழுத்துகளில் ! பாடல்கள் எளிமையாகத்தான் இருக்கின்றன. இருந்தாலும் பாடலுக்கான கருத்துரையை, பாடலை அடுத்துக் குறிப்பிடுவது சிறப்பாக இருக்கும் – பாடலைப் படிக்கும் வலைப்பூ நண்பர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் !

    எளிதில் பொருள் விளங்காச் சொற்கள் ஒன்றிரண்டு இருப்பின் அவற்றுக்கு மட்டும் அருஞ்சொற்பொருள் , கருத்துரையை அடுத்துத் தரலாம் !

    தங்கள் முகநூலில், வலைப்பூவின் இணைய முகவரியை அடிக்கடி வெளியிட வேண்டும். அம்முகவரி உங்கள் நண்பர்களின் பார்வைக்குச் சென்றால்தான், அவர்கள் வலைப்பூவைத் திறந்து பார்த்து படித்துச் சுவைக்க வாய்ப்பாக இருக்கும்.

    பாராட்டுகள் ! வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  2. மிகவும் நன்றி ஐயா மகிழ்ச்சி. உங்கள் கருத்துரைப்படி தொடர்கிறேன். தங்களின் பேரன்பிற்கு மிகவும் நன்றி ஐயா மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  3. இறுதி அடியில் மட்டும் சற்று கவனம் செலுத்தவும் மற்ற அனைத்து அடிகளும் சிறப்பாக உள்ளது

    பதிலளிநீக்கு