*வணங்குகிறேன் வண்ணக் குயிலே*
தமிழ்ச் சுடரை என்னுள் ஏற்றி வைத்த தலைவன், இனிய தமிழுக்கு இசை சேர்த்த ஏந்தல், தண்டமிழ்க் கருவூலம், பொன்றாப் புகழ் வாரி , புதுவைத் தமிழ்க் குயில், பாவேந்தர் பாரதிதாசனுக்கு என் வணக்கமும் நன்றியும் !
வலைப்பூ தொடங்கியுள்ள இந்த நன்னாளில் உன் பாடலை நினைவு கூர்வதில் பெருமை கொள்கிறேன் !
------------------------------
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)
புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன் |
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
பாவலர் யாழ்த்தமிழன்,
ஆட்சியர்,
”பாவலர் யாழ்த்தமிழன்” வலைப்பூ
[தி.ஆ: 2052, கடகம் (ஆடி) 25]
(10-08-2021}
---------------------------------------------------------------------------------------