என் சிந்தனையில் விளைந்த செவ்வந்திப் பூக்கள் !

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

(004) அறவெண்பா!

 அறவெண்பா!

🍁🍁🍁🍁🍁🍁

அறநெறி யாதென ஆய்ந்திடல் நன்றாம்

குறளைத் துணையெனக் கொண்டே!- குறையுள 

ஆரியப்  பண்பை யகற்றிட ஓங்குமே 

நேரிய நல்லறம் தான்.



வாய்மையும் ஈதலும் வாழ்வறமாய் ஏற்றுநிதம் 

தூய்மை மனத்தார் துலங்குவார் !- ஆய்ந்துநல்

அன்பே உயர்ந்த அறமெனக் கொண்டுலகில் 

இன்பமாய் வாழ்தல் நலம். 



உயிர்களிடம் அன்புசெயல் உள்ளத்தில் தூய்மை

முயன்றுநிதம் கொள்வீர் முறையே! - நயமிலாக்

காமம் வெகுளி களைந்து துணிவுடன்

தீமையை மாய்த்தல் சிறப்பு.

                                                                  

 அன்புடன்,



 பாவலர் அ. யாழ்த்தமிழன்,

புதுச்சேரி